வசந்தனின் பக்கம்

ஜூன் 27, 2006

கூத்தழிவு

கோப்பு வகை: அனுபவம், கலை, விமர்சனம் — குறிச்சொற்கள்:, , — maathahal @ 12:17 பிற்பகல்

கூத்தழிவு
சின்ன வயசில கூத்துப் பாத்திருந்தாலும் அதின்ர நிறைய விசயங்கள் பிறகுதான் எனக்கு விளங்கீச்சு. இடம் பெயர்ந்து மானிப்பாயில இருக்கேக்க, நாங்கள் ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தோம். எங்கட ஊர்ச்சனம் நிறையப்பேர் பக்கத்திலயே அகதிமுகாமொண்டில இருந்தீச்சினம். அவயள் மானிப்பாய் இந்துக் கல்லூரியில பெரியளவில கூத்து ஒண்டு போட வெளிக்கிட்டீச்சினம். பிறகென்ன எனக்குக் கொண்டாட்டம் தான். ஒவ்வொருநாள் இரவும் பாக்கப் போயிடுவன். ஆனா அது ஆரோ ஒரு புனிதரிண்ர கூத்து எண்டபடியா நான் எதிர்பாத்த அளவுக்கு அது எனக்கு விறுவிறுப்பா இருக்கேல. எண்டாலும் பாத்தன்.

அப்பதான் ஒருவிசயம் விளங்கினது. அது என்னெண்டா, கூத்து நடிக்கிற ஆக்களெல்லாரும் காசு கட்ட வேணுமாம். ஒரு பெடியன் தான் கூத்து நடிக்க வேணுமெண்டு அடம்பிடிக்க தாய்க்காறி தன்னட்டக் காசில்லயெண்டு சொல்ல அவன் இன்னும் அடம்பிடிக்க பொறுக்கேலாத அந்த விதவைத்தாய் அவனுக்கு அடியடியெண்டு அடிச்சா. பிறகு அத்தான்காரன் தான் தான் காசு கட்டுறன் எண்டு சொல்லி அந்தப் பெடியன் கூத்து நடிச்சான். இவ்வளவுக்கும் அந்தச் சனத்துக்கு இருக்க ஒழுங்கான கொட்டிலில்ல. நிவாரணத்த நம்பித்தான் பெரும்பாலான சனம். ஊரில கடற்தொழில் செய்ததால மானிப்பாயில தொழில் வாய்ப்புக்களும் குறைவு. சிலர் பருத்தித்துறை, மணற்காடு எண்டு வேற இடங்களுக்குப் போய் தொழில் செய்தினம். இந்தக் கஸ்டத்துக்கையும் காசு கட்டி கூத்துப் பழகுதுகள் சனம். அப்ப தான் எனக்கு அந்த விசயம் விளங்கீச்சு. ஏன் கூத்து நடிக்கிற ஆக்கள் காசு கட்ட வேணுமெண்டு கேட்டா, நாடகச் சோடின மேடச் செலவு, லைற் செலவு, எண்டு எல்லாம் அந்தக் காசிலதான் செய்யோணுமாம். ஆக மொத்தம் தாங்களே காசு போட்டு முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு இலவசமாகக் கூத்துக் காட்டுறதுதான் நடக்குது.

“அப்ப எங்கட ஊரில முந்தி சங்கிலியன் கூத்து எண்டெல்லாம் போட்டனியளெல்லோ. அதுக்கும் நடிக்கிற ஆக்களேதான் காசு போட்டுச் செய்தனியளோ?”
“பின்ன? வேற ஆர் காசு தாறது. நாங்கள் தானே போட்டுச் செய்ய வேணும்?”

இதுதான் நிலை. யாழ். திருமறைக் கலாமன்றம் போன்றன ஒரு நிறுவனமாகவும் மத அனுசரணையும் இருப்பவை. அவை தப்பித்துக் கொள்ளும். ஆனால் தனிமனிதர்களின் இப்பிடியான முயற்சிகளை நினைத்து என்ன சொல்வது? ஓரு மக்கள் கலையின் நிலை இதுதான். பெரிய சங்கீத சபாக்களுக்கு (அதில அரவாசிப் பாட்டுக்கள் விளங்காது) கொட்டும் பணங்களில் சிறிதளவாவது சிந்தினாலே பரவாயில்லை. உண்மையில் கலைகளிலும் பணக்கார – ஏழை, மேற்தட்டு – அடித்தட்டு என வித்தியாசங்களுண்டு போலும்.

வன்னியில் ‘வெற்றி உறுதி’ என்று ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின் ஒரு கலை மிக வேகமாகவும் அற்புதமாகவும் வளர்ச்சியடைந்தது. அதுதான் தெருக்கூத்து என்று நாமழைக்கும் வீதி நாடகம். மைக் செற் கூட இல்லாது எந்த இலத்திரனியற் கருவிகளும் இல்லாது ஓர் ஆர்மோனியப் பெட்டியும் மேளமடிக்க ஏதாவதொன்றும் கொண்டுவரும் இக்குழு போடும் நாடகங்கள்தான் அந்த நேரத்தில் போராட்டத்தின் முக்கிய பாத்திரம். வன்னியின் மூலை முடுக்கெல்லாம் திரியும் அக்குழு பாவிப்பது துவிற்சக்கர வண்டிகள்தான். அதிலேயே அவர்களின் வாழ்க்கை போகும். வீடு திரும்ப எத்தினை கிழமை எடுக்குமோ தெரியாது. கிடைத்த இடத்தில உண்பார்கள். பொதுமக்கள் தான் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள். எங்காவது பாடசாலையில் பொது மண்டபங்களில் படுப்பார்கள். ஓயாத அவர்களின் பணி முக்கியமானது. மக்களுக்குக் கருத்தைச் சொல்வதில் அவர்களின் பங்கு முக்கியமானது. படைக்கான ஆட்சேர்ப்பில் மிகமிக முக்கிய பங்காற்றியது அந்த வீதிநாடகங்களே. மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கும்கூட. வீதி நாடகக் காரரின் மேளச்சத்தம் கேட்டாலே அனைத்தையும் போட்டுவிட்டு ஓடிவரும் சனம்.

என்னைப் பொறுத்தவரை இந்த வீதிநாடகத்துக்கு இணையாக கருத்தூட்டத்துக்கு மிகச்சிறந்த கலை ஊடகம் என்று ஒன்றைச் சொல்ல முடியாது. சினிமா கூட இதன் பின்னேதான். அந்தக் கலைவடிவத்தையும் கலைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் கலைப் போராளிகள். அதுதான் மக்கள்கலை. தம்மை வருத்திக் கலை தந்தவர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி கலைஞர்களாகவே வாழ்ந்தவர்கள். இன்று அந்தக் கலையும் என்ன பாடோ தெரியாது. சரியான ஊட்டமில்லாவிட்டால் அதுவும் அழிந்துவிடும். இவற்றையெல்லாம் ஒரு கலையாக கலையுலக மேதாவிகள் பார்ப்பார்களோ தெரியாது. ஆராய்ச்சிகள் செய்வார்களோ தெரியாது. புத்தகங்கள் எழுதுவார்களோ தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் மிகமிகச் சக்தி மிக்கவையாக இருந்தவைதாம் இக்கலைகள். அவற்றின் மிகத் தீவிர ரசிகனாக இருந்த, இருக்கின்ற ஒருவன் என்ற வகையில் இவற்றின் இன்றைய நிலையிட்டுக் கவலைப்படுகிறேன்.
***************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

Nocs

மறுவா கிறுகி….

கோப்பு வகை: அனுபவம், ஈழம் — maathahal @ 12:10 பிற்பகல்

வணக்கம்!
‘ஈழத்தமிழ்’ என இன்று அறியப்படுவது பெருமளவு யாழ்ப்பாணத்தமிழையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஈழத்தின் வேறுபட்ட பாகங்களிடையில் மொழிப்பாவனையென்பது வேறுபட்டே இருக்கிறது. சில இடங்களில் சின்ன வேறுபாடுகளுடனும் சில இடங்களில் பெரிய வேறுபாடுகளுடனும் இருக்கிறது. அங்கே ஒருவரின் தமிழை மற்றவர் நக்கலடிப்பது வழமை. யார் பெரும்பான்மையோ அங்கே சிறுபான்மையினரின் தமிழ்நடை கேலிக்குள்ளாகும். ஆனால் பெரியளவில் மனத்தாங்கல் வருமளவு இருக்காது.

மட்டக்களப்புத்தமிழ் எனக்கு அறிமுகமானது தென்தமிழீழப் போராளிகள் மூலமாகத்தான். ஜெயசிக்குறு எதிர்ச்சமருக்காக கிழக்கிலிருந்து 1000 பேர்வரை வன்னி வநதிருந்தபோது அவர்கள் தமது மண்வாசனையை அப்படியே காவிக்கொண்டு வந்தார்கள். (ஏற்கெனவே வன்னியிலும் யாழிலும் நிறைய மட்டக்களப்பு ஆட்கள் இருந்தபோதும் அவர்கள் சூழலுக்கேட்ப மொழியை மாற்றியிருந்தார்கள். சிலரின் கதையில் அவர் மட்டக்களப்புத்தான் என்பதை சொன்னாலும் நம்ப முடியாது. ஆனால் இப்போது வந்திருந்த அணி முற்றாக மட்டக்களப்பு வாசனைதான்.)

ஒருநாள் அதிகாலை எங்கள் வீட்டுக் கிணற்றைப் பாவிக்கலாமோ என்று கேட்டு வந்தார்கள். “அண்ணே பூலி இரிக்கா?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்த முசுப்பாத்திதான். ‘பூலி என்றால் என்ன என்று நான் விளங்கிக் கொள்வதற்குள் விடிந்துவிட்டது. அதன் பின் அவர்களோடு பழகும் நிறையச் சந்தர்ப்பங்கள் வந்தன. வன்னியில் எங்கு பார்த்தாலும் மட்டக்களப்புப் போராளிகளைக் காணலாம். அவர்களின் மொழிநடை எம்மிலிருந்து மிகவும் வேறுபட்டதாயிருந்தது. ஆனால் சில சொற்களைத்தவிர விளங்கிக் கொள்வதில் எந்தக் கஸ்டமுமில்லை.

‘நான் “பேந்து” வாறன்’ என்றால் அவர்களின் நக்கல் தாங்கமுடியாது. நாங்கள் “பேந்து” என்பதை ‘பிறகு’ எனும் பொருளில் பாவிப்போம். ஆனால் அவர்களுக்குப் “பேந்து” என்றால் ‘பிளந்து’ என்ற பொருள். (சைக்கிள் ரியூப் பேந்து போச்சு, அத்திவாரம் பேந்து போச்சு). ‘பேந்து வாறன்’ என்றால் அவர்கள் பொருளில் பிளந்து அதாவது வெடித்து சிதறி துண்டு துண்டா வருதல் என்ற பொருள். உண்மையில் ‘பிறகு’ என்பதைவிட ‘பிளந்து’ என்ற சொல்லுக்குக் கிட்டவாகவே ‘பேந்து’ என்ற சொல் இருப்பதால் மட்டக்களப்பாரின் “பேந்து” தான் கூடுதலான சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மறுபடி என்பதை ‘மறுகா’ என்பார்கள். அடிக்கடி “ஓப்பாய்” என்று சொல்வார்கள். சிலரின் ஒவ்வொரு வசனத்திலும் இது வரும். ஆரம்பத்தில் இச்சொல் அதிர்ச்சி தந்தாலும் அவர்களிடம் அச்சொல்லுக்கு மோசமான அர்த்தம் இல்லையென்பதைப் புரிந்துகொண்டோம். எனக்கும் இந்தக் கதை தொற்றிக் கொண்டது தனிக்கதை. ஆனால் வீட்டுக்கு வரும்போது தெண்டித்து இவற்றை நிறுத்திக்கொள்வேன்.ஒருமுறை “கிபிர் வந்தா குண்டியில காலடிக்க ஓடேக்க தெரியும்” என்று சொன்னபோது அவர்கள் திகைத்துப் போனார்கள். எங்களிடம் இயல்பாக இருக்கும் அச்சொல் அவர்களுக்குக் கூடாத சொல். அதுபோல நாங்கள் சமையலுக்குப் பாவிக்கும் ‘பூண்டு’ எனும் பொருளை (இதை இந்தியாவில் வெள்ளைப் பூண்டு என்பார்கள்.) பூண்டு என்று பாவிப்பதில்லை. அது இன்னதுதான் என்று தெரிந்திருந்தலும் “உள்ளி” என்ற சொல்லே பாவிப்போம். ஆனால் அவர்கள் அந்தச் சொல்லை மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள். அவர்கள் பள்ளத்தை ‘மடு’ என்றுதான் சாதாரணமாகக் கதைக்கும்போது சொல்கிறார்கள். நாங்கள் யாரும் பேச்சுத்தமிழில் பள்ளத்தை ‘மடு’ என்று பாவிப்பதில்லை.

பழகுவதற்கு மிகமிக இனிமையானவர்கள். யாருடனும் உடனடியாய் இறுக்கமாய் ஒட்டிக்கொள்ளும் தன்மை அவர்களுக்கு இயல்பானது. ஒருவருடன் அரை மணிநேரம் கதைத்தாலே போதும் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத அனுபவம். அவர்கள் அனுபவித்த துன்பங்கள் எம்மிலிருந்து வேறுபட்டது. அவர்களின் கதைகேட்க மனசைப் பிளியும். அப்பா இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் நிறையப் பேர். சின்ன வயதில் இறந்து விட்டதாக நினைத்திருந்த தங்கச்சியை வன்னியில் இருவருமே போராளிகளாகச் சந்தித்த அனுபவம், இப்படி நிறைய.

இன்னும் அவர்களைப் பற்றி நிறைய அறிய வேண்டும். அவர்கள் மொழி பற்றி நிறைய அறிய வேண்டும். இன்னும் கலப்பில்லாத அருமையான தமிழ்ச்சொற்கள் அங்கே மண்டிக்கிடக்குமென்றே நினைக்கிறேன். அழகான கலைகள், எமக்கான கலைகள், என்று இன்னும் அந்த மண்ணில் நாம் தோண்ட வேண்டியவைகள் ஏராளம்.

 ***************************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

களவும் கற்று மற.

கோப்பு வகை: அனுபவம், நிகழ்வுகள் — maathahal @ 12:07 பிற்பகல்

களவும் கற்று மற.

நான் கொழும்பில நிக்கேக்க அக்கம்பக்கத்தில தொடர்ச்சியாக் களவு நடந்தீச்சு. அதுவும் கட்டிவச்சு வெருட்டி களவெடுத்தாங்களாம். அடுத்தடுத்ததா ரெண்டு மூண்டு வீட்ட ஒரே இரவில களவு அல்லது கொள்ளை நடக்கும். ஆனா ஆரும் பிடிபட்ட மாதிரித் தெரியேல. ஆனா களவு போனதெண்டு சொல்லிற கணக்கு எக்கச்சக்கமா இருக்கும். அந்த நாக்களில எங்கட சொந்தக்காரருக்கு ஒழுங்கா நித்திரயில்ல. வந்தா என்ன செய்யிறது? கத்தியக்காட்டினா என்ன செய்யிறது? எண்டு ஒரே தலையிடி. அதுக்க நானொரு இளந்தாரி இருக்கிறன் எண்டு அவைக்கு ஒரு தெம்பு இருக்கெண்டு வேற ஒரு வீட்டுக்காரருக்குச் சொல்லேக்க, அத தற்செயலாக் கேட்ட நான் அழுறதா சிரிக்கிறதா எண்டு தெரியாமல் முழிச்சன். நல்ல காலம் நான் நிக்கேக்க கள்ளன்கள் வந்து, நான் என்ர வீரதீர பிரதாபங்களக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் வரேல. எங்க பாத்தாலும் களவும் கொள்ளையுமா கொஞ்ச நாள் இருந்தீச்சு. ஆனா பத்திரிகைகளில அந்தச் செய்திகள் வராது. எங்கயேன் வங்கிக்கொள்ளை நடந்தா வரும்போல. ஆனா கொழும்பு வாசிகளுக்கே அந்தக் களவுகள் பெரிய விசயமாத் தெரியேல. அவயளுக்குப் பழகீட்டுதாம். ஆனா எனக்கு அந்த விசயங்கள் பெரிசாத்தான் இருந்தீச்சு.

வன்னியில களவுகள் எண்டது இப்பிடி பெருந்தொகையில நடக்கிறேல. இப்பிடி பெறுமதியா களவெடுக்க சனத்திட்ட சாமான் சக்கட்டும் இல்லதான். வன்னியில களவு போறதெண்டாலும் சைக்கிள்தான் களவுபோகும். ஒரு சைக்கிள் களவு போனாலே பட்டி தொட்டியெல்லாம் அதுதான் கதையா இருக்கும். காவல்துறையில முறைப்பாட்டுக்குப் போற விசயங்களில அரவாசிக்கு மேல சைக்கிள் பிரச்சினையாத் தான் இருக்கும். ஆனாலும் பெரும்பாலும் தெண்டிச்சுப் பிடிச்சிடுவினம். எங்க போறது? சுத்திச் சுத்தி அதுக்க தானே நிக்க வேணும். அதுக்க தானே சைக்கிள ஓடித்திரிய வேணும். இனி எஙகட சனத்தப் பற்றித் தெரியாதே? ஒருத்தனிட்ட ஏதும் வித்தியாசமா இருந்தா போட்டுக் குடுத்துவிடுங்கள். அதோட அங்கயிருக்கிற புலனாய்வு வலைப்பின்னல் அங்க இருந்தாக்களுக்குத்தான் தெரியும். ஒரு சைக்கிள் கடையிலபோய் “என்ர பூட்டுத் திறப்பு துலைஞ்சு போச்சு. இத ஒருக்கா உடைச்சுத்தாங்கோ” எண்டு ஒருத்தரும் போய்க் கேக்க ஏலாது. அப்பிடியெண்டா முதலில அது உங்கட சைக்கிள்தான் எண்டத உறுதிப்படுத்தோணும்.

அங்க தணிக்கை செய்யப்படாத படங்கள் போடத்தடை. ஆரேன் களவாக் கொப்பியெடுத்துப் போட்டா அதுகளப் பிடிச்சு தண்டப்பணம் அறவிடுறது வழக்கம். ஆனா திரைப்பட வெளியீட்டுப் பிரிவு எங்கயெங்க அப்பிடி படமோடுதெண்ட தகவல எடுக்க பெரிசாக் கஸ்டப்படுறேல. தகவல் தானா வரும். நேர போய் கையும் மெய்யுமாப் பிடிக்கிறதுதான் அவயின்ர வேல. ஒருக்கா பிடிபட்டவன் குறைஞ்சது 3 பேரையாவது பிடிச்சுக் குடுக்காம ஓய மாட்டான்.

சரி. விசயத்துக்கு வாறன். வன்னியில களவுப்பயத்தில நித்திர முளிச்சு இருந்ததா ஞாபகமில்ல. கள்ளனுக்குப் பயந்து பயந்து சீவிச்சதா ஞாபகமில்ல. உண்மையில அந்த விசயத்தில ஏனைய இடங்களவிட வன்னி மேல்தான். அங்க இந்த சைக்கிள் தருடிறதில நடந்த சுவாரசியமான சம்பவம் ஒண்டச் சொல்லப்போறன்.

புதுக்குடியிருப்பில சைக்கிள் களவு விசயத்தில ஒருத்தர் தொடர்ச்சியாப் பிடிபட்டுக் கொண்டிருந்தார். பிடிபடுறதும் தண்டனை செய்யுறதும் பிறகு பிடிபடுறதும் தணடனை செய்யிறதும் எண்டு இவரிண்ட பாடு போகுது. அவர் எடுத்த எல்லாச் சைக்கிளும் பூட்டின நிலையிலதான் எடுத்திருக்கிறார். அது ஒரு பெரிய விசயம். ஏனெண்டா பூட்டின சைக்கிளொண்ட ஒருத்தர் தூக்கிக் கொண்டு போறது வன்னியில சரியான ரிஸ்க். எங்கயேன் சைக்கிள் களவு போனா காவல்துறை முதலில நேரா இவரிட்டதான் போகும். சிலதுகள் இவர் எடுக்கேல எண்டு விடுதலை கிடைக்கும். ஒரு கட்டத்தில வெறுத்துப்போய், “ஏன்ராப்பா திருப்பித் திருப்பி இப்பிடிச் செய்யிறாய்?” எண்டு கேட்டிருக்கிறாங்கள். அவர் சொன்னாராம்,

“அதண்ண, அதுகளக் கண்ட உடன எடுக்க வேணும் போல கிடக்கு.”

பாரதிராஜாவின்ர கண்களால் கைதுசெய் பாத்த போது உண்மை உறைத்தது.
“சரி, பூட்டின சைக்கிள என்னெண்டு எடுக்கிறனி? அதையாவது சொல்லன்” எண்டு கேக்க முதலில பிகு பண்ணிப்போட்டுச் சொன்னாராம் அந்த தொழில் ரகசியத்த.

சைக்கிள் றிம்மில கவ்விப்பிடிக்கக் கூடியமாதிரி ஒரு கவ்வி ஒண்டச் செய்து, அதில வீல் ஒண்டப் பூட்டி (பெரிய சூட்கேசுகளுக்கு இருக்கிறமாதிரி) நிரந்தரமா வச்சிருக்கிறது. பிறகு இரவு நேரத்தில போய் பூட்டி நிக்கிற சைக்கிள் பின் சில்லின்ர றிம்மில அதப் பூட்டிப் போட்டு சைக்கிள உருட்டிக்கொண்டு போறதாம். சைக்கிள் சில்லு உருளாது. ஆனா இந்த குட்டிவீல் உருளும். இரவில சைக்கிள உருட்டிக்கொண்டு போறவன ஏன் சனம் சந்தேகப்படப்போகுது? பகலிலயெண்டா அந்தக் குட்டிவீல் அற்றயேன் கண்ணில குத்தியிருக்கும்.

உங்களுக்கு இந்தத் திட்டம் விளங்கீட்டுதோ? வலைப்பதியிற சைக்கிள் திருடர்கள் இதைச் செய்து பாக்கலாம். எதுக்கும் அந்த மனுசனிட்ட ‘கொப்பிறைட்’ எடுத்துச் செய்யிறது நல்லம்.
களவும் கற்று மற.

பின்னூட்டங்களுடனும் ஒலிப்பதிவுடனும் கூடிய மூலப்பதிவு

காதலும் கடவுளும்.

கோப்பு வகை: கதை, பொது, மதம், விமர்சனம் — maathahal @ 12:03 பிற்பகல்

பனங்காட்டு முனிவன் மதவடியில் வசந்தனுக்கு அருளிய அருளுரை.
ஒருநாள் தற்செயலாக் கிடைத்த தரிசனத்தைச் சரியாகப் பயன்படுத்திய வசந்தன், தன் சந்தேகங்களைக் கேட்டு ஒரு மதவடியில் ஞானம் பெற்றான்.

ஐயா! எனக்கொரு சந்தேகம்.
கேள் மகனே கேள். சந்தேகப்படுவதால்தான் இன்னும் நீ மனிதன்.
ஐயா! கடவுள் இருக்கிறாரா இல்லையா?
ஹஹஹஹஹ. எவ்வளவு காலமாய் இதுபற்றி யோசித்திருக்கிறாய்?
நீண்டகாலமாகவே எனக்குள்ளிருக்கும் சந்தேகமிது. உங்களிடம் தெளிவு கிடைக்குமா?
ஹஹஹ. நீ ஒரு முட்டாள். ஆம் கடவுள் பற்றிச் சிந்திப்பவனையெல்லாம் முட்டாள் என்றுதான் சொல்வேன். காதலும் கடவுளும் ஒன்று. இரண்டுமே முட்டாள்தனங்கள். உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
சின்ன வயதில் இருந்தது.இப்போது?சொல்லத்தெரியவில்லை. நீண்டகாலமாக வழிபடுவதில்லை.
ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையாவென்று குழப்பமாயிருக்கிறது சரியா?
ஆம் குருவே. இதுபற்றி உங்கள் நீண்ட விளக்கத்தைக் கேட்க ஆவலாயுள்ளேன்.

தம்பி! மனித மனம் விசித்திரமானது. ஏகப்பட்ட முரண்களைக்கொண்டிருக்கும் சங்கதிகளையே எந்தக் கேள்வியுமில்லாமலும் குழப்பங்களில்லாமலும் அசைபோடப் பழகிக்கொண்டது. நான் உன்னைக் கேட்கிறேன். கடவுள்தான் பூமியைப்படைத்தார் என்றால், பூமியின் தோற்றம் பற்றிய விஞ்ஞானக் கோட்பாடுகளை முற்றாக நிராகரிக்கத் தயாரா?
கடவுள்தான் மனிதகுலத்தைப் படைத்தாரென்றால், டார்வினின் கொள்கைகள், அவரின் கோட்பாடுகள் எல்லாவற்றையும் நிராகரிக்கத் தயாரா?
கடவுளின் படைப்புக்கொள்கையை கவனத்திலெடுக்காமற் செயற்படும் விஞ்ஞானத்தின் இற்றைவரையான முன்னேற்றத்தை நிராகரிக்கத்தயாரா?

அதெப்படி முடியும் ஐயா?
ஆம். முற்றாக மறுதலிக்க முடியாமல் ஆனால் கடவுளின் படைப்புக் கொள்கையை நம்பிக்கொண்டு, குறைந்தபட்சம் கடவுள் இருக்கிறாரென்று நம்பிக்கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம் பெரியது. இதில் எந்தத் தவறுமிருப்பதாகப் படவில்லை. பாடசாலையில் மூன்றாம் வகுப்பிலேயே எமது இந்த இரட்டை நிலைப்பாடு தொடங்கிவிடுகிறது. சமயபாடத்தில் இறைவனின் படைப்புத்திறன், காக்கும்திறன் என்று படித்துக்கொண்டு, அதேநேரம் சுற்றாடல் பாடத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்; அவனது மூதாதையர் ஹோமோ சேப்பியன்ஸ், ஹோமோ நியண்டதால் என்று படங்களோடு விலாவாரியாகப் படிக்கத் தொடங்குகிறோம். மனித மனம் இந்த இரு முரண்களையும் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்படியே இருந்துவிட்டுப்போக வேண்டியதுதானே. பிறகேன் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வு?

கடவுட் கொள்கையைப் பலமாக ஆட்டம்காண வைப்பதற்குத் தொடக்கம் வானியல்தான். வானியலின் வளர்ச்சிதான் மதங்களுக்கு முதல் எதிரியாயிருந்தது. பின் பலவிதயங்கள் தெளிவாகியது. அந்த வானியலிற்கூட கடவுள் பக்தியுள்ளவர்கள் நிறையப்பேர் இருந்திருக்கிறார்கள். ‘கல்பனா’ எனும் இந்தியப் பெண்ணொருத்தி ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்றாள். ஆனால் மீண்டு வரவில்லை. அவள் இறுதியாக விண்ணிலிருந்து அனுப்பிய தொலைநகல் மிக உருக்கமானது. வரிக்குவரி கடவுள் துதிபாடும் அக்கடிதம், அவளது நம்பிக்கைகளின் வெளிப்பாடு. விண்ணிலிருந்து வானியல் ஆராய்ச்சியாளினியொருத்தி கடவுள் துதிபாடி வரைந்த அம்மடல் யாருக்கும் குழப்பத்தையூட்டவில்லை. அதுதான் தனிமனித நம்பிக்கை. நம்பிக்கை வேண்டியவர்கள் கடவுள் என்றொரு பாத்திரத்தை, உருவத்தை நினைத்து மன்றாடுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள்.

ஐயா! அப்படியானால் விஞ்ஞானம், கடவுள் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை?

அது தன் வாதங்களையும் எடுகோள்களையும் நிருபிப்பதிலேயே குறியாக உள்ளது. கடவுள் உண்டு என்றும் சொல்லவில்லை. இல்லையென்றும் சொல்லவில்லை. கடவுள் பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் அது தன் வழியிற்செல்கிறது. இந்த அசட்டையே கடவுள் இல்லையென்பதன் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். தன் கோட்பாடுகளுக்கு ஏறக்குறைய நிறைவான ஆதாரங்களைக் காட்டிவிட்டது. பலவற்றை நிரூபித்தும் விட்டது. இன்னும் முயன்று கொண்டிருக்கிறது.

அப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்?
கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்பதெல்லாம் தேவையற்ற வாதங்கள். பரிணாமக்கொள்கையில் வேருன்றி அதன் வழியிலேயே ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானிகூட கோயில் சென்று கடவுளைத் தொழக்கூடும். அவன் தன் தொழிலில், கடமையில், ஆய்வில் கடவுளை எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடர்புபடுத்த மாட்டான். இரண்டும் வெவ்வேறு தளங்கள். எமது மனம் இரண்டையுமே குழப்பமில்லாமற் கையாளும் தகமை பெற்றது. ஆகவே நீ குழம்பாதே.
கடவுள் இல்லையென்று நம்பினால் அது சரிதான்.
கடவுள் இருக்கிறாரென்று நம்பினால் அதுவும் சரிதான்.
ஆனால் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ந்தால் அதுதான் தவறு. கூடவே முட்டாள்தனமும் கூட.

சரி ஐயா!காதலையும் கடவுளையும் எப்படிச் சம்பந்தப்படுத்துகிறீர்கள்?
சரியாகக் கேட்டாய்.இரண்டிலும் அறிவைப் பிரயோகிக்கக் கூடாது.
காதலை வைத்தே உனக்கு நானிதைத் தெளிவிப்பேன்.
காதலில் அறிவுபூர்வமாய் யோசித்தால் என்ன நடக்கும்?
காதலி இருந்துவிட்டுப்போன இருக்கையில் தானும் இருந்து லயிப்பது,
அவள் மூக்குச்சளி சீறி எறிந்துவிட்டுப்போன கைக்குட்டையை எடுத்துப் பத்திரப்படுத்துவது,
அதில் காதலியின்முகம் பார்ப்பது,
அதனால் முகத்தைத் துடைத்து காதலி முத்தம் தருவதாகப் பரவசப்படுவது,
அவள் தலையிலிருந்து விழுந்து பூவொன்றை மாதக்கணக்கிற் பத்திரப்படுத்தி அப்பூவோடு பேசுவது
என்று சினிமாத்தனமான செய்கையெல்லாம் செய்ய முடியாது. அறிவைப்பாவித்தால் இவையெல்லாம் முட்டாள்தனமாயும் சிறுபிள்ளைத்தனமாயும் தோன்றும்.
ஆனால் இப்பிடிச் சிந்தித்தால் உன்னால் காதலின் இன்பத்தை அடையமுடியாது. கூடவே காதலியையும் அடையமுடியாது. ஆக காதலில் முட்டாள்தனங்களும் சிறுபிள்ளைத்தனங்களும்தான் தேவை. கூடவே மனித இனத்தின் தொடர்ச்சிக்கும் இது தேவை.
ஆகவே காதலில் அறிவுபூர்வமாய்ச் சிந்திப்பது எவ்வளவு முட்டாள்த்தனமோ,அதுபோலவே கடவுள் விதயத்தில் அறிவைப்பாவிப்பதும் முட்டாள்த்தனமானது. கடவுள் பற்றிச் சிந்திப்பதற்கு சிறிதளவாவது உமது மூளையைப் பயன்படுத்தாதே.
நினைப்பதற்கும் சிந்திப்பதற்குமுள்ள வேறுபாட்டை உனக்கு நான் தெளிவிக்கத் தேவையில்லை.

நன்றி ஐயா! பூரண தெளிவு பெற்றேன். வருகிறேன். அதற்குமுன் ஒரு கேள்வி. உங்கள் பெயர் என்ன?
ஹஹஹஹஹா. யாம் பலபேரில் உள்ளோம். உனக்குத் தரிசனம் தரும்போது என்பெயர் ‘வன்னிய முனிவன்’. வீடு அங்கே இருக்கிறது. இந்தப்பக்கம் ஏன் போகிறாய்?

கடவுள் இல்லையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த கூற்று உண்மையானால் பத்துத் தேங்காய் உடைப்பதாக அந்த மூலைக்கோயிலில் வேண்டுதல். இப்போ கடவுள் இல்லையென்ற என்கூற்றுப் பலித்துவிட்டது. அதுதான் அந்த நேர்த்தியைச் செய்யப்போகிறேன்.

ஹஹஹ. விளையாட்டுப் பிள்ளையடா நீ.

*********************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

சாதீஈஈயம்

கோப்பு வகை: அனுபவம், ஈழம், பொது, போராட்டம், மதம், விமர்சனம் — maathahal @ 12:00 பிற்பகல்

இதை ஒரு ‘இயம்’ ஆக்கிக் கதைப்பதே சரியா தெரியாது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு முக்கியமானதுதான் இது. இங்கே சாதி பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே. இது ஆராய்ச்சியோ அறிவுரையோ அன்று என்பதை முதலிற் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கெனவே தமிழோடு பட்டபாடு போதும். என் அனுபவங்கள் என்று சொல்லிவிட்டதால் நான் சார்ந்த தளத்தை மட்டுமே என்னாற் சொல்ல முடியும். எனவே அந்தத்தளம் இங்கே பலருக்குப் பிடிக்காததாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றுதான் என் சொந்த ஊர். எனது காலத்தில் சாதி ஒடுக்குமுறையென்பது என் கிராமத்தில் இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் வேறுபாடுகள் நன்றாகவே இருந்தன. மேல் சாதியென்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தச் சாதியும் இருந்ததில்லை. (இது என் கிராமத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இடங்கள் பற்றி அந்தச் சின்ன வயசில் எனக்குத் தெரியாது) ஆனால் குறிப்பிட்ட ஆக்கள் வீதியால் வரும்போது காவோலை கட்டி இழுத்து வரவேணும் என்ற நடைமுறை முன்பு இருந்ததாக என் பாட்டன் பரம்பரை சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. என் காலத்தில் அது அறவே இருந்ததில்லை. ஏன் தந்தை காலத்திலும் அது இருந்ததில்லையாம்.

எங்கள் கிராமத்தில் எல்லாக் கிணறுமே குடிப்பதற்குப் பாவிப்பதில்லை. சமைப்பதற்குப் பாவித்தாலும், குடிப்பதற்குச் சில குறிப்பிட்ட கிணறுகளையே பாவித்தார்கள். (ஆனால் உண்மையில் எல்லாக் கிணறுமே குடிக்கக் கூடிய தண்ணீருள்ள கிணறுகள் தான். சுவைக்காகத்தான் இப்படி கிணறுக்கு அலைவது. தண்ணீருக்குச் சுவையில்லையென்று விஞ்ஞானம் பேசாதீர்கள். சுவையிருக்கிறது. இது எந்தக் கிணத்துத் தண்ணீரென்று என்னாற் சுவைத்துப்பார்த்துச் சொல்ல முடியும்.) முந்தி தண்ணீர் எடுப்பதில் சாதிச் சண்டைகள் வந்ததாம். ஆனால் என் காலத்தில் எல்லாருமே தண்ணீர் அள்ளினார்கள். குறிப்பாகக் கோயில் கிணறுகள் எந்த நேரமும் எல்லாருக்காகவும் இருக்கும். கோயில் வளவுக் கதவுகள் இரவிற்கூடப் பூட்டப்படுவதில்லை, தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் திருமணங்கள் என்று வரும்போது சாதி நிச்சயமாய்ச் சம்பந்தப்படும்.

தொழில் முறைமூலம் பிரிக்கப்பட்ட சாதி தொடர்ந்து வருவதற்கு மதங்களின் பங்கு அளப்பரியது. இன்னும் சாதியம் வேரூன்றி இருப்பதற்கும் மதங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது என் கருத்து. நான் என் ஊரில் சாதி பற்றி அறிந்த கதை இதுதான்:கரையார், பள்ளர், வேளாளர் என்று சனம் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என் தாயிடம் கேட்கிறேன்:
“அம்மா! கரையார், பள்ளர் எண்டா ஆரம்மா?”
என் தாய் எனக்களித்த பதில் இதுதான்.
“செவத்தியார் கோயில்காரர் பள்ளர், தொம்மையப்பர் கோயில்காரர் கரையார், அந்தோனியார் கோயில்காரர் வெள்ளாளர். இப்ப விளங்கீட்டுதோ?”
ஓமெண்டு தலையாட்டினன். தொழில்களைக் குறித்து எனக்கு சாதி சொல்லப்படவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், ‘அப்ப உதில எந்தத் தொழிலும் செய்யாமல் அரசாங்க வேல மட்டும் பாக்கிற நாங்கள் என்ன சாதி?’ என்று கேட்டிருப்பேன் என்று என்தாய் நினைத்தாளோ தெரியாது.

இப்படித்தான் இந்து மதத்திலுமிருந்தது. சாதிக்கொரு கோவிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை சாதிக்கொரு புனிதரை அல்லது கடவுளை வைக்கவில்லை. எங்களுரில் வெள்ளாளருக்கு இருக்கும் அந்தோனியார் பக்கத்து ஊரில் கரையாருக்கு. புனிதர்கள் தப்பித்தார்கள். தொழில்கள் மாறி எல்லாரும் தமக்கு வசதிப்பட்ட தொழில்களைச் செய்யத்தொடங்கிய பின்னும், ஏராளமானோர் அரசாங்க வேலையும் தனியார் வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யத் தொடங்கிய பின்னும், இன்னும் அந்தத் தொழில்முறைச் சாதி பலமாக உயிரோடிருப்பதற்கு மதங்கள் முக்கிய காரணம்தான். நேரடியாகச் சாதி பற்றிப் பேச முடியாமல் இப்பிடித்தான் எங்களுரில் பேசிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக வேறோரு ஊரிலிருக்கும் ஒரு கரையாரைப் பற்றிப் பேசும்போது,
“அவயள் தொம்மையப்பர் கோயில் ஆக்களெல்லோ.”
எண்டு சொல்லுவினம். ஆனா அந்த ஊரில அப்பிடியொரு கோயிலே இருக்காது. எங்கட ஊர்க் கோயில வச்சே எல்லா இடத்து ஆக்களையும் குறிப்பினம்.

சொந்த ஊரிலயிருந்து 1992 இல இடம்பெயர்ந்து மானிப்பாயில வந்து இருந்தம். ஏராளமான சனம் மானிப்பாய்க்குத்தான் வந்தது. முதல் பள்ளிக்கூடங்களில எல்லாரும் கலந்து ஒண்டாத்தான் ஒரு பிரச்சினையுமில்லாம இருந்தவை. பிறகு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிரதானமா மூன்று முகாம்கள். இவற்றில் இரண்டு பெரிய முகாம்கள். அவற்றில் சாதி மதப்பிரச்சினையில்லாமல் எல்லாரும் ஒன்றாகவே இருந்தார்கள். அதில் தனியே ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் எல்லாரையும் குடியமர்த்தினார்கள். இறுதிவரை பிரச்சினையில்லாமலிருந்தது. ஆனால் மூன்றாவதாக அமைக்கப்பட்ட முகாம் தான் சிக்கலைத் தந்தது. அதில் ஆக முப்பது வரையான குடிசைகள்தான். மிகச் சிறிய முகாம். ஆனால் அவ்வளவு பேரும் ஒரே ஊர் அக்கள். அதாவது என் கிராமத்தவர்கள். அதுவும் ஓரே மதத்தவர், ஆனால் இரு சாதிக்காரர். குடிசைகள் அமைக்கும்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. குடிசை ஒழுங்குகளை மாற்றித் தருமாறு பிரச்சினை. என்னவென்றால் தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கப் போவதாக இரு தரப்புமே சொன்னார்கள்.

அந்த முன்று முகாம்களுமே மானிப்பாய் அந்தோனியார் கோவில் பங்கு நிர்வாகத்தின்கீழ்தான் இருந்தன. பங்குத்தந்தை இதை ஒப்பிவில்லை. எல்லாரும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். ஆனால் சில ‘பெரியவர்கள்’
“சுவாமி! உங்களுக்கேன் பிரச்சின. நாளைக்கு இதுகள் தங்களுக்க ஏதும் பிரச்சினப் பட்டா அது உங்களுக்குத்தானே இடைஞ்சல். பேசாம அவயள் சொல்லிற மாதிரியே விட்டிடலாம்.”
என்று சொல்லி சம்மதிக்க வைத்தாயிற்று. குடிசை ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது. வெறும் முப்பது குடிசைகளுக்குள் ஊரில் நடந்த அத்தை கூத்துக்களும் நடந்தன. நல்ல வேளை பெரியளவு பிரச்சினைகள் வரவில்லை. மனத்தளவில்தான் அந்தப் பிரச்சனை.

ஆனால் யாழ் இடப்பெயர்வின் பின் வன்னிவந்தபின் இந்த நிலைமைகளில் மாற்றம் வந்தது உண்மை. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் அவர்களை மாற்றிவிட்டதோ என்னவோ. இங்கே சாதிப்பிரச்சினை, வேறுபாடு முற்றாகக் களையப்பட்டதாக நான் சொல்ல வரவில்லை. யாழில் இருந்த நிலைமை நிரம்பவே மாறிவிட்டது. வன்னிக்குள்ளே கூட நிறைய இடப்பெயர்வுகள். இதிலே எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? அகதிகள் சம்பந்தமாக வேலை செய்தவன் என்ற முறையில் இந்த மாற்றங்களை என்னால் உறுதியாகப் பதிவு செய்ய முடியும். அகதிமுகாம்களில் பல காதல் திருமணங்கள் கூட நடந்ததுண்டு. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றிக் காதலர்கள் கவலைப்படவில்லை. தமிழீழக் காவல்துறை தான் அவர்களின் நம்பிக்கை. குடும்பம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கும் பட்சத்திலும் வயது சரியாக இருக்கும் பட்சத்திலும் காதல் கைகூடும். தமிழகத்திலும் இங்கேயும் காவல்துறைக்கு இது ஒரு முக்கிய பணிபோலும்.

ஒருவர் சொன்னார்:
“உவங்கள் ஒரே சாதிக்குள்ள அல்லது மதத்துக்குள்ள காதலெண்டா ஏனோ தானோவெண்டு இருப்பாங்கள். ஆனா சாதிமதம் மாறியெண்டா விழுந்தடிச்சு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்கள்.”
எனக்கு இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகப் படவில்லை. அவர்கள் காதலை ஆதரிக்கிறார்களா வரவேற்கிறார்களா என்பதைத் தாண்டி அதை அவர்கள் சாதி மதங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. பல போராளிகளின் திருமண பந்தம் இவற்றைத்தாண்டி நடந்ததால் சொந்த தாய் தந்தையரின் உறவுகூட இல்லாமல் இருப்பதும் நான் கண்டுள்ளேன். புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற் கலந்து கொள்கிறார்கள்.

மதங்களின் ஆதிக்கத்தை மக்களிடத்திற் குறைப்பது முக்கியமானது. ஆனால் புலிகளாற்கூட அதைச் சரிவர செய்யமுடியவில்லை. ‘இம்’ என முன் பிரச்சனை வந்துவிடும். (ஆனால் மாவீரரின் வித்துடல் விதைப்பு விடயத்தில் மட்டும் எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் அவர்களால் இருக்க முடிகிறது.) சாதிப்பிரச்சினையும் மதங்களோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது என் அவதானம்.

வன்னியில் வெளிப்படையாக சாதி பற்றிக் கதைத்தாலோ இன்னொருவரைச் சாதிப்பேர் கொண்டு திட்டினாலோ அது பிரச்சினைக்குரிய விசயம்தான். மனத்தில் என்ன இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் சாதிப்பெயர்களைக் கேட்டும் அதன் வசவுகளைக் கேட்டும் வளரும் சந்தர்ப்பங்கள் குறையும். வன்னியில் இளைய சமுதாயம் எப்படியும் களத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். எல்லைப் படையாகப் போயிருக்கிறோம். பெரிய தாக்குதல் நேரங்களில் ஆயுதங்கள் கைப்பற்றல், இராணுவ உடல்களை அப்புறப்படுத்தல், காயக்காரரை அப்புறப்படுத்தல், வழங்கல்களைச் செய்தல், உணவுப்பொதிகளை வினியோகித்தல் என நிறையக் களப்பணிகளைச் செய்திருக்கிறோம். இரத்ததானம் நிறைய. இவற்றிலெல்லாம் இளைய சமுதாயத்திடம் வழமையைவிடப் புரிந்துணர்வொன்று அதிகமாய் ஏற்பட்டிருந்தது, குறிப்பாக எல்லைப் படையாகக் கடமைக்குச் செல்லும்போது. நண்பர்கள் வட்டமென்பது மிகமிக விசாலமானது. சாதியைக் கருத்திற்கொள்ளாதது. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட நண்பர்கள் வட்டம் சாதியைக் கருத்திற்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எம்மக்கள் மத்தியில் மதவேறுபாட்டைப் பிரச்சினையாகக் கொள்வதிலும்விட சாதிவேறுபாட்டைப் பிரச்சனையாய்க் கொள்வது சற்று அதிகம்போல் நான் உணர்கிறேன். ஆனால் காலப்போக்கில் இந்தப்பிரச்சனை ஒழியலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என் நம்பிக்கை வன்னிதான். அங்கு ஓரளவுக்கு எல்லாருக்கும் சமமான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதைக் காணலாம். ஏதோ தம்மாலியன்றவரை புலிகள் சமூகக் கட்டமைப்பைப் பேணுகிறார்கள். முன்பு வன்னியில் பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கண்டிருப்பீர்கள். அது ஒரு கட்டத்தில் பெருகத்தொடங்கியது. ஆனால் இன்று அறவே அந்த நிலையில்லையென்பதை உறுதியாக் கூறுவேன். ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிட்டு நான் வன்னிபற்றிப் பெருமைப்படும் விசயங்களில் இதுவுமொன்று.

அத்தோடு அனைத்துத் தொழில்களுக்கும் இயன்றவரை உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். சீவல் தொழில் செய்பவர்களுக்கு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் ஒரு சீவல் தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலின்போதான இறப்புக்கு அக்குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது. தனிப்பட யாருக்கும் கள் விற்க முடியாது. அது சட்ட விரோதமானது.

இதேபோலவே சிகை அலங்கரிப்புத் தொழிலும். (இந்தப் பெயரில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்). தனிப்பட யாருக்கும் அவர்களின் வீட்டிற்குப் போய் முடி வெட்ட முடியாது. எந்தக் கொம்பனென்றாலும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குத்தான் (சலூனுக்கு) வந்து வெட்ட வேண்டும். சரியான மருத்துவக் காரணங்களின்றி யாரும் வீட்டிற்குச் சென்று முடிவெட்ட முடியாது. இவை ஓரளவுக்கு ஆண்டான் அடிமை மனோபாவத்தை அல்லது முறையை ஒழிக்கும்.

இன்னும் அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய. ஆனால் அவர்களால் செய்ய முடியாதவை என்றும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற பெயரில் தமது நீதித்துறையில் சீதனத் தடைச் சட்டத்தையே கொண்டுவந்தார்கள். அச்சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் நடந்ததாக அறிகிறேன். இச்சட்டம் பற்றி எங்கள் தமிழர்கள் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. (அன்ரன் பாலசிங்கம் இச்சட்டத்தை ஆதரித்து எழுதி, பின் அவரே வேறொரு பேரில் விமர்சித்து எழுதி மீண்டும் அதற்கு தன் பெயரில் விளக்கம் கொடுத்து கொஞ்சக்காலம் மினக்கிட்டார். ஆனால் ஒருத்தரும் அந்த விவாதத்தில கலந்துகொள்ளேல.) ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. யாழ் இடப்பெயர்வுடன் வன்னிக்கு வந்த நேரத்தில் புலிகளின் நிர்வாகத் தழம்பல்களுக்கிடையில் இச்சட்டம் செயலிழந்துவிட்டது. இன்றும் செயலிழந்த ஒரு சட்டமாகத்தான் அது இருக்கிறது. இவ்விசயத்தில் அவசரப்பட்டார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது போர் ஓய்ந்துவிட்ட இந்த நேரத்தில் வன்னியில் மீண்டும் பழய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அவை எப்படிக் கையாளப்படுகின்றனவோ தெரியவில்லை. நானிருக்கும்வரை பெரிதாக எந்த மாற்றமுமில்லை. சுனாமியின்பின் நிலைமை எப்படியிருக்கிறதென்றும் தெரியவில்லை.

என்பதிவில் யாழ்ப்பாணத்தைத் தாக்கியெழுதியதாக ஒரு பார்வை தென்படலாம். அப்படியன்று. என் அனுபவங்களும் பார்வைகளும்தான் அவை. சில விசயங்கள் எனக்குத் தீராத ஆத்திரத்தை வரவழைப்பவை. சென்ற வருடம் யாழ் போனபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி (என்னைப் புலியாக அல்லது வால்பிடியாக நினைத்து, – வன்னியிலிருந்தவனையெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பார்களோ தெரியாது.)
“டேய் நீதானே அவங்களோட திரிஞ்சனி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். பொடியளில கரையாரோ வெள்ளாளரோ கூட இருக்கினம்?”
இது. இதுதான் நான் கண்ட யாழ்ப்பாணம். இந்த ஒரு சம்பவத்தை வைத்து நான் யாழ்ப்பாணத்தை எடை போடுவது தவறுதான். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குறிப்பு: சாதி பற்றிய விடயங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொதுவாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்னும் ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.
‘தலித்’ என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். ஈழத்தில் இச்சொற்பாவனை நானறியவில்லை. ஆனால் சிறிரங்கன் பாவிப்பதைப் பார்த்தால் அங்கேயும் இச்சொல் பாவனையிலிருந்திருக்கிறது போலுள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்.

*******************************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

என் வியாகுலங்கள்…

கோப்பு வகை: அனுபவம், ஈழம், போராட்டம் — maathahal @ 11:57 மு.பகல்

1994 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு நாள்.

இடம் யாழ். மத்திய கல்லூரி மைதானம்.

விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த இரு பாடசாலை அணிகளுக்கிடையான உதை பந்தாட்டப் போட்டியொன்று முடிவுக்கு வருகிறது. இரு அணியுமே சமநிலையில் நின்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டு பின் தண்ட உதைகள் (Penalties) வழங்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. அதுதான் மாவட்ட மட்ட இறுதிப்போட்டியென்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. விளையாடிக் கொண்டிருந்தவற்றில் ஒன்று என்னுடைய பாடசாலையணி.

இந்நிலையில் என் பாடசாலை அணித்தலைவன், ஏற்கெனவே நன்றாய்க் களைத்துப்போய் தளம்பியிருந்த பேற்றுக்காப்பாளனை (Goal keeper) மாற்றி, தானே அப்பணியை ஏற்றுக் கொள்கிறான். அருமையாக இரு பந்துகளைத் தடுத்து, தனக்குக் கிடைத்த உதையை சிறப்பாக உதைத்து அன்று வெற்றி தேடித் தந்தான். அவன் தான் “றொபின் பெக்கின்”

1991 காலப்பகுதி. இதே பெக்கினுடன் ஜெயராம் என்று இன்னொருவன். இருவருமே 15 வயதுக்குட்பட்ட என் பாடசாலை அணியின் பிற்காப்பு வீரர்கள். அந்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் இறுதிப்போட்டியில் வென்று முதலிடத்தைப் பெற முடியாவிட்டாலும் அருமையாக விளையாடி பாராட்டுப் பெற்றது அந்த அணி. இந்த பின்வரிசை வீரர்கள் இருவருமே ஏனையோரால் மிகவும் பாராட்டப்பட்டவர்கள். தொழில்முறை வீரர்களைப்போன்று அவர்களின் லாவகமும் பாணியும் இருந்தன. அப்போது பிரபல்யமாகப் பேசப்பட்ட இரு பிற்காப்பு வீரர்கள்.

இருவருமே என் வகுப்புத் தோழர்கள். ஒரே வகுப்பில் படித்தோம். அதுவும் ஜெயராம் என் ஊர்க்காரன் எனபதால் சற்றுக் கூடதலான அன்னியோன்யம் இருந்தது. இருவருமே அமைதியான சுபாவமுள்ளவர்கள். 1992இன் நடுப்பகுதியில் முதலாவது இடப்பெயர்வு நடந்தபோது ஜெயராமுக்கும் எனக்குமிருந்த தொடர்பு முறிந்து போனது.

ஆனால் பெக்கின் என்னோடயே கூடப்படித்தான். யாழ் இறுதி இடப்பெயர்வு வரை ஒரே வகுப்புத்தான். பல நேரங்களில் ஒரே வாங்குதான். (வாங்கு- Bench) நாங்கள் பின்வாங்கார். (பின்வாங்கார் பின்வாங்கார் எண்டு சொல்லுறது ஏன் தெரியுமோ? ஏனெண்டா அதவிட பின்வாங்குறதுக்கு வாங்கு இல்ல.) பாடசாலை நேரத்தை விட அடிக்கடி நாங்கள் பாடசாலையிலோ அல்லது வேறிடத்திலோ சந்திக்கிற சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திச்சு. உதைபந்து விளையாட்டுப் பயிற்சியின்போது அல்லது உடற்பயிற்சியின்போது இப்படியான சந்தர்ப்பம். ஓய்வு நேரமெண்டா உடன அதில ஒரு பாட்டுக்கோஷ்டி உருவாகும். அப்ப இசைக்குழுக்கள் தான் எங்கட பொழுதுபோக்கு. பெக்கின்தான் மேளமடிப்பான். அவனோட சேந்து ‘ட்றம்’ வாசிக்கிறது தோமஸ் எண்ட ஒருத்தன். அவனும் எங்கட வகுப்புத்தான் எண்டாலும் எங்களவிட ரெண்டு வகுப்புக் குறைய படிக்க வேணும் போல இருப்பான் (உருவத்தில). நடராஜா கொம்பாஸ், அதோட ரெண்டு சில்வர் கப், வேற ஏதாவது தகரச் சாமான், ரெண்டு பேனையள். இதுகள் தான் ட்றம் வாத்தியக்கருவி. யாராவது பாட்டுப்பாட இவங்கள் இசை குடுக்க அமர்க்களமாத்தான் பொழுது போகும்.

எங்களுக்கு ஒரு வகுப்பு மூத்ததாயும் இப்பிடியொரு கோஷ்டி இருந்திச்சு. கவிஞர் பொன். கணேச மூர்த்தியின் மூத்த மகன் மௌலி தான் அதின்ர தலை. அதவிட கேசவன், றுபன், யோன்போல், சுரேஸ், கண்ணன், ஜெயரட்ணம் எண்டு ஒரு பட்டாளம். அவையள் இருந்தா நாங்கள் அடக்கி வாசிப்பம். அவங்கட கோஷ்டி நிச்சயமா நல்லாயிருந்தீச்சு. அதில றுபன், கேசவன், யோன் போல், ஜெயரட்ணம் நாலு பேரும் இண்டைக்கு இல்ல. நாலு பேருமே “மாவீரர்கள்”.

பெக்கின் சரியான அமைதியான பேர்வழி. யாழ். பல்கலைக்கழக மைதானத்தில்தான் ஒவ்வொருநாளும் பின்னேரம் விளையாடிவிட்டு மானிப்பாய்க்கு வருவோம். அப்ப வாற வழியலில பம்பலடிச்சபடியே வருவோம். எங்கயேன் பெட்டயளோட ராத்த வெளிக்கிட்டா பெக்கின் நைசாக் கழண்டிடுவான். அந்தப் பிரச்சினையில எங்களோட சேர மாட்டான். அதப்போலதான் எங்கயேன் உதைந்தாட்டப் போட்டி முடிஞ்சு வெற்றியோட வரேக்க (எப்பவும் வெற்றிதான். கிட்டத்தட்ட 95 வீதம்) எங்களோட நல்லா பம்பலடிச்சு வருவான் (அவன்தானே அணிக்கு தலை). ஆனா கொஞ்சம் ஓவராப்போனா ரெண்டு தரம் சொல்லுவான். பிறகு சத்தம் போடாமக் கழண்டு தனியப் போயிடுவான்.

றோட்டில கள்ள மாங்காயள் பிடுங்கிறது கள்ள இளநீர் பிடுங்கிறது எண்டு எங்கட விளையாட்டுக்கள் கொஞ்ச நாளில அலுத்துப்போய், பப்பாப் பழம் பிலாப்பழம் எண்டு முத்தேக்க அவன் சரியான எரிச்சல்பட்டான். அந்த ஆட்டத்துக்கு தான் வரேல எண்டு ஒதுங்கிக் கொண்டான். எக்கேடும் கெட்டுப்போ, ஆனா எங்களக் காட்டிக்குடுக்காட்டிச் சரி, எண்டிட்டு விட்டுட்டம்.

அப்ப யாழ்ப்பாணத்தில சைக்கிளில பரலலாப் போறதுக்குக் கடுமையான தடை. தமிழீழக் காவல்துறை அதில கடுமையா நிப்பினம். ஆனாலும் நாங்கள் எங்களையறியாமல் அப்பிடிப் போவோம். அப்பவும் பெக்கின் எச்சரிப்பான். ஆனா நாங்கள் கேக்கிறேல. பிறகு எங்களவிட பிந்தி வருவான். நாங்கள் காவல்துறையிட்ட மாட்டுப் படேக்க அவன் அதுக்குள்ள இருக்கமாட்டான். தண்டம் கட்டுறதுக்கு எங்களிட்ட காசிருக்காது. அப்பிடியில்லாட்டி ரெண்டு மூண்டு மணித்தியாலம் மறிச்சு வச்சிட்டு விட்டுவிடுவினம். ஆனா நாங்கள் அவசரமாப் போகோணும், மச் இருக்கு எண்டு கெஞ்சிக் கூத்தாடி ஒரு மாதிரி வெளிக்கிடுவம். ஆனா பள்ளிக்கூடத்துக்கு அறிக்கை வரும். அத சூட்டோட சூடா அனுப்பினாப் பரவாயில்ல. அந்த போட்டி வெற்றியோட அது அடிபட்டுப்போகும். சிலவேள 10 நாள் கழிச்சுத்தான் பேர் விவரங்களோட அறிக்கை பள்ளிக்கூடத்துக்கு வரும். அப்ப அந்த மச் வெற்றியெல்லாம் மறந்துபோயிருக்கிறதால “நன்றி கெட்டதுகளால” குண்டி பழுத்திடும்.

1997 இன் ஆரம்பம். விடுதலைப்புலிகள் மாதந்தோறும் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை “ஒளிவீச்சு” எண்டொரு ஒளிநாடாச் சஞ்சிகை வெளியிடுவார்கள். அதில் அம்மாத செய்திகள், சண்டை விவரங்கள், ஒரு குறும்படம், சமகாலப்பார்வை, இயற்கை சார்ந்த விடயங்கள், பொருண்மியத் தகவல்கள் என நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் அம்மாதத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் பெயர் விவரங்கள் அவர்களின் படத்தோடு வரும்.

அண்டைக்கும் அப்பிடியொரு ஒளிவீச்சு பார்த்துக்கொண்டிருந்தன். மாவீரர்கள் வரிசை வந்து கொண்டிருக்கு. திடீரெண்டு ஜெயராமின்ர மாதிரி ஒரு முகம். நிதானிக்கிறதுக்கிடையில அடுத்த படம். அது என்ன பேர் எண்டது கூட கேக்கேல. உடன படம் போட்டுக்கொண்டிருக்கிற ஆளிட்டப்போய் ஒருமாதிரிக் கேட்டு அந்த இடத்தைத் திருப்பிப் போட வச்சன். ஓமோம். அது என்ர ஜெயராமே தான். யாழ்ப்பாணத்தில வீரச்சாவெண்டு அறிஞ்சன். அவன் இயக்கத்துக்குப் போனது கூட எனக்குத் தெரியாது. பிறகு விசாரிச்சதில கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில படிச்சுக்கொண்டிருந்திட்டுப் போனவனாம்.

1999 நடுப்பகுதி. ஒருநாள் முல்லைத் தீவுக் கடற்கரையில நிக்கிறன். அதால கொஞ்சப் பெடியள் போனாங்கள். “வசந்தன்” எண்டு ஆரோ கூப்பிடுற சத்தம். ஆனா பழகின குரல். திரும்பிப் பாத்த உடன மட்டுக்கட்டீட்டன். அது பெக்கின் தான். தோளில ஏ.கே. ஒண்டோட. அதே அமைதியான கதை. அதே சிரிப்பு. எனக்கு ஆச்சரியம். ஏனெண்டா இந்த 4 வருசமா அவன நான் காணவேயில்ல. கொஞ்ச மாதத்துக்கு முதல்தான் இயக்கத்துக்குப் போனவனாம். என்ன இயக்கப்பேர் எண்டு கேட்டுத் தெரிஞ்சுகொண்டன். கனக்க கதைக்க நேரமில்ல. அதுக்குள்ள அவங்களுக்குரிய வண்டி (கடற்புலிகளின் படகை வண்டி எண்டுதான் சொல்லிறது) வந்திட்டுது.

பிறகொருநாள், ஓயாத அலைகள் -3 நடந்துகொண்டிருக்கேக்க அதே பெக்கின் நிலவரசனாக வெற்றிலைக் கேணிச் சமரில் வீரச்சாவடைந்ததாக பத்திரிகை பார்த்துத் தெரிந்து கொண்டேன். அவனது ட்றம் துணை தோமஸ், கப்டன் வானரசனாக வீரச்சாவடைந்ததை அறிந்துதான் அவனும் இயக்கத்துக்குப் போயிருந்ததை அறிந்து கொண்டேன். வேவு அணியில் இருந்தவனாம். அவனுக்குச் சரியான இடம். ஜெயரட்ணம் சினைப்பர் காரனாக இருந்து கப்டன் பொய்கையனாக வீரச்சாவடைந்ததையும் புலிகளின் குரலில் கேட்டேன். சண்டையில் இரண்டு காலுமில்லாமல் இருந்த எட்மன் என்ற இளங்குயிலனை (இவனும் என் பின்வாங்கான்தான். நானும் இவனும் ‘குளப்பவாதிகள்’ என்று வகுப்பில் பேரெடுத்தவர்கள். யாழ். இடப்பெயர்வுக்கு முதலே இயக்கத்துக்குப் போய்விட்டான்.) விசுவமடுவில் கண்டேன். பாடசாலையில் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரசித்தி பெற்ற அந்தக் கால்களை ஒரு கிளைமோர் காவிச்சென்றிருந்தது. கொஞ்ச நாளின்பின் இரண்டு பொய்க்காலுடனும் சைக்கிளில் ஓடிப்போவதைக் கண்டு பிரமித்து நின்றேன். இடைக்கிடை சந்திப்பேன். பின் முல்லைத்தீவில் அடிக்கடி சந்திப்பேன். கடற்புலியில் இருப்பதாகச் சொன்னான். எனக்கு அப்போதே புரிந்துவிட்டது. எதிர்பார்த்தபடியே பின்னொரு நாள் கடற்கரும்புலி மேஜர் இளங்குயிலனாக வெடித்துப் போனதைப் பேப்பரில் பார்த்தேன்.
—————————————————————-

1995 இடப்பெயர்வின்பின் 2003 இல் முதன்முதல் யாழ். போனேன். என் பாடசாலைக்கும் போனேன். எங்கும் புதுமுகங்கள். நான் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர் ஒருவரைச் சந்தித்ததால் மகிழ்ச்சி. பாடசாலையின் உதைபந்தாட்டத் திறன் அப்பிடியே இருக்கிறது. அண்மையில் இலங்கை மட்டத்தில் நடந்த போட்டியிற் கூட யாழ்ப்பாணம் சார்பில் அந்தப் பாடசாலை அணியே வந்திருந்தது. அனால் ஏதோ ஒரு போட்டியில் தோற்றுவிட்டது. 15 வயதுக்குட்பட்ட அணியைப் பார்க்க எல்லாம் தவ்வலுகளாகத் தெரிந்தது. நிச்சயமாக அந்த வயதில் என் தலைமுறை நல்ல வளர்த்திதான்.

அங்கிருக்கும் மாணவர்கள் சிலரோடு கதைத்தேன். பெக்கின் பற்றி கேசவன் பற்றி றூபன் பற்றிக் கேட்டேன். எவனுக்கும் எதுவும் தெரியாது. அது அவர்கள் பிழையன்று. யாருடைய பிழையுமன்று. ஆனால் மனம் வருந்தியது. முந்தி ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் அந்தந்த பாடசாலையில் படித்து போராளியாகி வீரச்சாவடைந்தவர்கள் நினைவுகூரப்படுவர். அவர்களின் வரலாறு படித்துக் காண்பிக்கப்படும். நான் எழுதுவினைஞரிடம் சென்று மாவீரர்கள் வரலாறைக் கேட்டேன். நான் என்னை உறதிப்படுத்தியதும் தந்தார். சிலரின் விவரங்கள் இருந்தன. 1992 வரை வாசிக்கப்பட்ட அதே பதினொரு பேரின் விவரங்கள்.

வேறெதுவும் இணைக்கப்படவில்லை. என்னோடு படித்தவர்கள் மட்டுமே பதினொரு பேர் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவர்கள். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு எதுவும் இணைக்க முடியாது. ஆனால் இனியும் அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்குப் போகுமா தெரியாது. ஏனென்றால் ஆக ஐந்தே ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே நான் அறிந்தவர்கள். மிகுதி அனைவரும் புதியவர்கள். அத்தோடு பழைய அதிபரும் மாற்றம். ஒன்றாக படித்த மற்றவர்களும் இல்லை. நிறையப் பேர் வெளிநாட்டில் அல்லது வன்னியில். சிலர் போராளிகளாக.

இன்று, கூட்டமாக எங்காவது ஒரு குழு இருந்து தாளம்தட்டிப் பாட்டுப்பாடினால் பழைய ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. கூடவே பெக்கின், தோமஸ், றூபன், கேசவன், ஜெயராம், ஜெயரட்ணம், யோன் போல், எட்மன்… இன்னும் இன்னும்….

********************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

தமிழ் வரிவடிவத்தில் தேவைப்படும் மாற்றம்.

கோப்பு வகை: பொது, விமர்சனம் — maathahal @ 11:54 மு.பகல்

இதைப்பற்றி ஏற்கெனவே பலர் கதைத்துவிட்டார்கள். காசி தன் பதிவில் இதுபற்றி எழுதியிருந்தார். இங்கே நானும் என்பங்குக்கு எழுதுகிறேன். பெருமளவு காசியின் கருத்துக்களுடன் ஒத்திருக்கிறேன்.

‘உ’கர, ‘ஊ’காரங்கள் சேர்ந்து வரும் உயிர் மெய்களுக்குத் தனித்தனி வரிவடிவம் கொடுக்கப்படுகிறது. ஏனைய உயிர்மெய் வடிவங்கள் போல் இவற்றுக்கும் பொதுவான முறையொன்று இருந்தால் தமிழைப் பயில்வோருக்கு மிக எளிதாக இருக்கும். அத்தோடு கணிணி சம்பந்தப்பட்டும் அனுகூலமுண்டு. இதனால் என்னென்ன அனுகூலங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. என்னைவிடச் சிறப்பாக வேறு யாராவது சொல்ல முடியும்.

ஒஸ்ரேலியாவில் வசிக்கும் மருத்துவர் பொன்.சத்தியநாதன் இது சம்பந்தமாக முயற்சிகள் எடுத்துள்ளார். அவரும் இதுமாதிரியான கருத்தையே கொண்டுள்ளார். கிரந்தத்துக்கு நாம் பாவிக்கும் குறியீடுகளையே இந்த ‘உ’கர ‘ஊ’காரமேறிய உயிர்மெய்களுக்குப் பயன்படுத்தலாம். (இதற்குப் பலரின் ஆதரவும் உண்டென்று நினைக்கிறேன்.) ஆனால் அவற்றை அப்படியே பயன்படுத்துவதிற் சில சிக்கல்களுள்ளன. கிரந்தத்தை அப்படியே பயன்படுத்துகிறோமென்ற மனோபாவம் ஒன்று. அதைவிட பக்கவாட்டு அகலம் அதிகமாகும் என்பது மற்றொன்று. இதைக் கருத்திற்கொண்டு அக்குறிகளை செங்குத்தாகப் போடுதல் நலமென்று கருதப்படுகிறது. ‘விடுதலை’ பத்திரிகை இப்படியொரு எழுத்துருவைப் பாவிப்பதாக அறிகிறேன். யாராவது விளக்கவும்.

பொன்.சத்தியநாதன் அவர்கள் வடிவமைத்த ஓர் எழுத்துருவைப் பாவித்து நாலைந்து வசனங்கள் தாயாரித்துள்ளேன். அவற்றில் ‘உ’கர, ‘ஊகார உயிர்மெய்களை உங்களாற் புரிந்து கொள்ளக் கூடியவாறுள்ளதா என்பதைத் தெரிவிக்கவும். படத்துக்குக் கீழே அவற்றின் தற்போதைய வடிவத்தைத் தந்துள்ளேன். இவ் எழுத்துருவில் டி,டீ என்பவற்றுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழமையாக நாம் பாவிப்பதுபோலன்றி, ‘ட’வுடன் விசிறி வரும். இந்த மாற்றங்களும் தேவையென்பது என் கருத்து. மேலதிகமாக இரு இடங்களை இவ்வெழுத்துக்களுக்காக ஒதுக்கியுள்ளோம். இவற்றையும் உங்களாற் புரிந்து கொள்ள முடிகிறதா எனப்பாருங்கள்.

இது பற்றிய கருத்துக்களைப் பகிரவும். இதிலிருக்கும் குறைநிறைகளை அலச வேண்டும். எனக்கு இம்மாற்றங்கள் பிடித்துள்ளது. மேலும் என்னென்ன செய்யலாமென்பதையும் சொல்லுங்கள். செய்யுங்கள். எழுத்துரு சம்பந்தமாக பரவலான விவாதமொன்று தேவை. ஒருங்குறி சம்பந்தமாகவும் பிரச்சினைகளுள்ளன. திடீரென இம்மாற்றங்கள் குழப்பத்தைத் தரலாம். வாசிப்பதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கலாம். ஆனால் இவற்றின் பலாபலன்கள் முக்கியமானதென்றால் அவற்றைச் செயற்படுத்துவது முக்கியம். இதிற் கடினமென்று சொல்ல எதுவுமில்லை. 13 எழுத்துத் திருத்தங்களைக் கொண்டு வந்தபோது நாம் ஏற்றுக்கொள்ளவில்லையா? வெறும் ஈராண்டுகளுக்குள் சரளமாக எழுதப்பழகவில்லையா? அப்படிப்பட்ட மாற்றம்தான் இதுவும்.

ஒலிவடிவம் தான் முதன்மையானது. வரிவடிவம் மாறாமலே இருப்பதன்று. காலத்துக்குக் காலம் அது மாற்றமடைந்து வந்துள்ளது. இதுபற்றி வேறிடத்திற் பேசியாகிவிட்டது. ஆக வரிவடிவத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்க முடியாது.முக்கியமாக அச்சில் வந்துவிட்ட இலட்சக்க்ணக்கான புத்தகங்களை என்ன செய்வது என்ற கேள்வியுண்டு. என்னைப் பொறுத்தவரை பழய முறை, புது முறை இரண்டிலுமே வாசிக்கத்தக்க தேர்ச்சி இயல்பாக மக்களிடம் இருக்கும். இன்று எழுத்துச் சீர்திருத்தத்தின்பின் நாமந்த 13 எழுத்துவடிவங்களையும் இருமுறைகளிலும் வாசித்தறியப் பழகிக்கொண்ட மாதிரி.

இந்த மாற்றத்தின்படி நமக்கு உயிரெழுத்துக்கள் பதினொன்று, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு, உயிர்மெய்யைக்குறிக்கப் பாவிக்கும் குறிகள் (கீற்றுக்கள்?) ஒன்பது என முப்பத்தெட்டு விசைகள் மட்டுமே விசைப்பலகையில் தேவை. ‘ஃ’ ஐயும் சேர்த்தால் நாற்பது. (உயிரில் ‘ஒள’ என்தற்குத் தனியான விசை தேவையில்லை. அதேபோல் உயிர் மெய்யில் ‘ஒள’ இன் வரிசையில் வரும் அனைத்துக்கும் தனிக்கீற்றுத் தேவையில்லை.)

இங்கே வழமையான ‘ள’கரத்தை ‘ஒள’க்குப் பாவிப்பதைப் பொன்.சத்தியநாதன் எதிர்க்கிறார். அதற்கென தனியான, ‘ள’கரத்துடன் குழப்பாத வரிவடிவமொன்றின் தேவையை அவர் விளக்குகிறார். இதற்கு சுளியற்ற ‘ள’கர வரிவடிவத்தை இப்போது அவர் பரிந்துரைக்கிறார். ஆனால் சிறிய எழுத்துருக்களில் வித்தியாசம் தெரியுமளவுக்கு இருக்க வேண்டும். இதே வடிவத்தை ‘ஊ’காரத்தில் வரும் ‘ள’கரத்துக்கு மாற்றாகவும் பாவிக்க வேண்டுமென்பது அவர் வாதம்.

1.அவனுக்குப் பிடித்தது எனக்கும் பிடிக்கும்.
2.முருகனை வேண்டுங்கள்.
3.எனக்கும் இது வேண்டும்.
4.இவை உங்களுக்குப் புரிகிறதா?
5.நான் கூடவே வரவா?
6.ஊழிப்பெருவினை.
7.ஒளடதம் பற்றி ஒளவையார் எழுதினார்.
8.இந்த முறையை ஏற்கிறீர்களா?
——————————————————-

இனிச் சும்மா பம்பலாக…..
கண்ணன் சொன்னது போல் தனியே உயிர் மற்றும் மெய்களைக்கொண்டே எழுதும் முறையும் நன்று போலவே படுகிறது, என்று நான் சொன்னால் என்னை அடிக்க ஒரு கூட்டமே தயாராகி வரும். ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.முடிந்தால் கண்ணன் முறையில் வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள். (மெய்யிற்குக் குற்றுப்போடாமல் எழுதுவது என் ஆலோசனை. ஆனால் இங்கே குற்றுப்போட்டே எழுதுகிறேன்.)

ப்ஓங்க்அட்ஆ ம்அட்அப்ப்அச்அங்க்அளஆ.

இது புரிந்துவிட்டால் அடுத்த வளர்ச்சி. உயிரில் நெடிலுக்கு ஏன் தனியெழுத்து வேண்டும். குறிலையே இருமுறை எழுதினால் ஆயிற்று. (ஆங்கிலத்தைப்போல. எமக்கு 25 போதும்.)
‘ஐ’காரத்தை முறையே அ,இ ஆகியவற்றின் இணைவொலியாகவும் ‘ஒள’காரத்தை அ,உ ஆகியவற்றின் இணைவொலியாகவும் கொண்டால் இன்னும் இரண்டு குறைந்து 23 எழுத்துக்களுடன் தமிழ் தயார். இதையும் முயன்று பாருங்கள்.

ப்ஒஒங்க்அட்அஅ ம்அட்அப்ப்அச்அங்க்அள்அஅ.அஇய்அஇய்ஒஒ ந்எஎர்அம்அஅய்இட்ட்உத்உ வ்அர்அட்எஎ?

************************************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக…

கோப்பு வகை: பொது, விமர்சனம் — maathahal @ 1:06 மு.பகல்

முசுப்பாத்தி…
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
‘இது நல்ல முசுப்பாத்தி’ என்றால் ‘நல்ல நகைச்சுவை’ என்று கருத்து. ‘முசுப்பாத்தியான ஆள்’ என்றால் ‘நகைச்சுவையான மனிதன்’.
‘முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்’ என்றால் ‘நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்’.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow’s Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow’s Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி – முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.

****************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

“பயங்கர வாதிகள்”- ஒரு கண்ணோட்டம்.

கோப்பு வகை: ஈழம், விமர்சனம் — maathahal @ 1:05 மு.பகல்

ரெறறிஸ்ட் படத்தின் சொல்லப்படாத கதை அல்லது இரண்டாம் பாகம்.
————————————————————-
அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் அந்தத் தலைமையின் நிலையென்ன? அதன் பின்னாலுள்ள மக்களின் நிலையென்ன? அவர்களுக்கான பதிலென்ன? மேலும் இவ்வளவு காலமும் அந்தத்தாக்குதலை நடத்த செலவிட்டவைக்கு (ஆள், பொருள்) என்ன பதில்? இனி மீண்டும் அத்தாக்குதலை நிகழ்த்துவதற்காக இழக்கப்போகும் காலம், ஆள், பொருள் இழப்புக்கள் எவ்வளவு? இனி இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? இத்தாக்குதல் நடத்தப்படாததால் ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு?
————————————————————
சந்தோஷ் சிவன் இயக்கிய ரெறறிஸ்ட் படத்தைப் பற்றி மேலோட்டமாக என் பதிவொன்றிற் கூறியிருந்தேன். அப்படத்தைப் பற்றியும் அதன் முடிவு பற்றியும் அதற்குப்பின்னாலுள்ள சிக்கல்களைப் பற்றியும் இப்போது பேசலாமென்றிருக்கிறேன்.

கடல்கடந்து செல்லும் குழுவொன்றின் இலக்கு ஒருவரைக் கொல்வது. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் முறை தற்கொலைத்தாக்குதல். அத்தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஒரு பெண். தாக்குதலுக்கான திட்டமிடல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாளும் நெருங்குகிறது. இதற்கிடையில் அப்பெண் கர்ப்பமாயிருப்பது தெரிய வருகிறது. ஒத்திகையும் முடிந்து தாக்குதலுக்குச் சென்றாயிற்று. கடைசிக்கணத்தில் அப்பெண் தனது மனத்தை மாற்றி தாக்குதல் நடத்தாமல் திரும்புகிறாள்.


இதுதான் கதை. ஏனைய தமிழ்ப்படங்களோடு ஒப்பிடும்போது மிகக்குறுகிய நேரத்தில் படம் முடிகிறது. பாடல்களில்லை. சண்டைக்காட்சிகளில்லை. தேவையற்ற பாத்திரப்படைப்புக்களில்லை. குடும்பம், சுற்றம் என்ற உறவுகளில்லை. பாசப்பிணைப்பென்ற பேரில் புருடாக்கள் இல்லை. நிறைய “இல்லை”களைக் கொண்டு நிறைவான ஒரு படம். மணிரத்தினம் “உயிரே” எடுத்தபின்னும் ஏன் ரெறறிஸ்ட் வந்தது என்றால், இரு படங்களையும் பார்ப்பதுதான் அதற்கான பதில். ஒன்று ஏறத்தாள வழமையான சினிமா என்பது என்கருத்து.

ரெறறிஸ்டை இப்படிப் புகழ்கிறேன் என்பதற்காக அதன் அத்தனை அம்சங்களோடும் நான் உடன்படுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். படத்தலைப்பே எனக்கு முரண்பாடான முக்கிய இடம். இதைவிடவும் நிறையக் கேள்விகள் அப்படித்தின் மீதுண்டு. இயக்குநர், தனது சமயோசிதத்தால் பல இடங்களில் தன் மீதான விமர்சனத்திலிருந்துத் தப்பித்துக்கொள்கிறார். யார் மீதான கொலை முயற்சி என்பது சொல்லப்படவில்லை. படம் யாரைப்பற்றியது என்பதற்கும் படத்தில் தெளிவான பதிலில்லை. ஈழத்துக் குழுவொன்றைப் பற்றியது என்பதும் படத்திற்சொல்லப்படவில்லை. நீரைக்கடந்து செல்லும் குழு என்பதும், கழுத்தில் ஏதோவொன்றைக் கட்டியிருப்பவர்கள் என்பதையும் தவிர வேறில்லை. ஈழத்து மொழிவழக்குக் கூட பாவிக்கப்படவில்லை. ஆனாலும் புலிகளை மனத்தில் வைத்தே இயக்குநர் இப்படத்தை எடுத்தார் என்று பலரைப்போலவே நானும் நம்புகிறேன்.

இயக்குநர் தேவையற்ற விவாதங்களுக்குப் போகவில்லை. கதாநாயகி கர்ப்பமடைய ஏதுவான காட்சிகூட விவரிக்கப்படவில்லை. (வழமையான தமிழ்ச்சினிமாவை யோசித்துப் பார்க்கவும்.) அக்கர்ப்பத்துக்கு யார் காரணம் என்றும் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. (தெளிவாகச் சொல்லியிருந்தும் எனக்குத்தான் விளங்கவில்லையோ தெரியேல.) களத்தில் செத்துக்கொண்டிருக்கும் ஒருவனைக் காட்டப்படுகிறது. அவன்தானோ? அச்சந்தர்ப்பம் தானோ? ஆனால் இயக்குநருக்கு இவைகள் தேவையற்ற கேள்விகள். “அவள் கர்ப்பமாயிருக்கிறாள்; அவ்வளவுதான். மேற்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்” என்பதுதான் அவர் நிலைப்பாடு.

“பயங்கரவாதிகளில்” கிட்டத்தட்ட ஆண்கள் அனைவரையும் 15 வயதிற்கும் குறைவாகக் காட்டப்படுகிறது. (அந்தச் ‘செத்துக்கொண்டிருப்பவனைத்’ தவிர). மேற்சட்டையில்லாமல் நிற்கும் ஆண் “பயங்கரவாதிகளுக்குள்ளால்” அந்தப்பெண் நடந்து வருவது உறுத்துகிறது. இக்காட்சி மூலம் நாங்கள் ‘நினைத்துக்கொண்டிருப்பவர்களை’ விட்டுவிட்டு வேறு யாரையோ பற்றி படமெடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.

திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாளராக நடிப்பவரின் பெயர் தெரியவில்லை. அவர் குருதிப்புனலில் நடித்தபோது, ‘கிட்டு’வின் சாடை இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். அந்தச் சாடை இருக்கும் வரை அவருக்கு இப்படியான படங்களில் “பயங்கர வாதி” வேடங்கள் உறுதி. குருதிப்புனல், ரெறறிஸ்ட், ரிமோல்ட் என்ற படங்களில் அவருக்குக் கிடைத்த வேடங்கள் அப்படி.

சரி, இனி முதன்மையான விதயத்துக்கு வருகிறேன். படத்திற் காட்டப்பட்டுள்ளபடி கதாநாயகி தன் முயற்சியைக் கைவிட்டுவிடுகிறாள். இத்தோடு படம் முடிகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதற்குப் பின்தான் உண்மையிலேயே பிரச்சினைகள் தொடங்குகின்றன. அத்தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்தக் குழுவுக்கு, அக்குழுவைச் சார்ந்த மக்களுக்கு என்ன பதில்? அத்தாக்குதல் நடத்தப்படாததால் இனி ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் இத்தாக்குதலை மீண்டும் செய்வதற்காகக் கொடுக்கப்போகும் விலைகளுக்கும் என்ன பதில்?

இப்படம் இன்னாரைப் பற்றியது என்று ஏதும் இல்லாமலிருப்பது, பிரச்சினையை தனியே ஒரு குழுவுக்கும் இயக்கத்துக்கும் தனியொரு சம்பவத்துக்கும் மட்டுமென்று குறுக்காமல், உலகம் முழுவதும் பொதுமைப்படுத்தப் பார்க்கிறார் இயக்குநர். “ரெறறிஸ்ட்” என்று தலைப்பிடடதூடாக மக்கள் ஆதரவுள்ள, இனவிடுதலைக்காகப் போராடும் ஓர் இயக்கத்தைப் படத்தில் ஒட்டிப்பார்க்க வகையில்லாதபடி இயக்குநர் செய்து விடுகிறார். ஆனாலும் இப்படம் புலிகள் என்ற அமைப்பைத்தான் கருத்திற்கொண்டது என்று பெரும்பாலும் கருதப்பட்டதாலும், அப்படியே சில விமர்சனங்களும் வந்ததாலும், புலிகள் மட்டுமன்றி அவர்களைப் போன்ற ஏனைய விடுதலையமைப்புக்களுக்கும் தற்கொலைத்தாக்குதலென்பது பொதுவான உத்தியென்பதாலும் இப்படத்திற் காட்டப்பட்டுள்ள முடிவின் பின்னாலுள்ள சிக்கல்களைச் சொல்வதே நோக்கம். குறிப்பிட்ட இயக்கத்தையோ குறிப்பிட்ட கொலை முயற்சியையோ மட்டும் வைத்து இது எழுதப்படவில்லை. இவ்வாதம் அனைவருக்கும் பொதுவானது.

ஒரு விடுதலையமைப்புக்கு தற்கொலைத்தாக்குதல் வழிமுறையென்பது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. (இது சில சந்தர்ப்பங்களில் மாறுபடலாம்.) ஆள், ஆயுதம், பொருளாதாரம், பன்னாட்டு ஆதரவு என்பற்றில் பலமான எதிரியை எதிர்கொள்வதில் இப்படியான உத்திகள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது நிறைந்த பலனைத் தந்துமுள்ளது. “குறைந்த இழப்பு, நிறைந்த பலன்”. ஈழப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால், அதன் முதல் தற்கொலைத்தாக்குதல் மில்லரால் நெல்லியடியில் ஆரம்பிக்கப்பட்டது. அத்தாக்குதல் எழுப்பிய பேரதிர்வு இலங்கையை ஆட்டுவித்தது. சடுதியான மாற்றங்கள் அத்தாக்குதலின்பின் நடந்தன. அன்றிலிருந்து இன்றுவரை காத்திரமான மாற்றங்கள் தற்கொலைத்தாக்குதல்கள் மூலம் நிகழ்த்தப்பட்டன. ஆகப்பிந்திய எடுத்துக்காட்டு கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்பு.

ஓர் இலக்கை அழிக்கச் சொல்லி ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒரு கூட்டம் பணிக்கப்படுகிறது. அவர்களும் மனமுவந்து தான் அப்பணியை ஏற்கிறார்கள். பின் தாக்குதல் நடத்த வேண்டிய தளத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து அத்தாக்குதலை தமது சுயநலனுக்காகக் கைவிடுவது எத்தனை அயோக்கியத்தனம்? எவ்வளவு பெரிய துரோகம்? (இங்கே துரோகம் என்பதை அதற்குரிய மிகக்கடுமையான தொனியுடனேயே கையாளுகிறேன். இச்சொல் சகட்டு மேனிக்குப் பாவிக்கப்பட்டு தன் உண்மையான பொருள் வலுவை இழந்து வருகிறது. சமீபத்தில் இதைப்போல தன் காத்திரமான பொருள் வலுவை இழக்கத் தொடங்கியிருக்கும் பரிதாபத்துக்குரிய இன்னொரு சொல் “பாசிசம்”.)

அவர்களுக்கு முன்பேயே தாக்குதல் திட்டத்திலிருந்து விலகிவிட சந்தர்ப்பமிருக்கிறது. ஆகக்குறைந்தது தாக்குதலுக்கு செல்லும் முன்பாகவேகூட ஏதாவது செய்யலாம். மாற்றுவழிகள் யோசிக்கப்படக்கூடும். இறுதிக்கணத்தில் ஏற்படும் மாற்றத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் அந்தத் தலைமையின் நிலையென்ன? அதன் பின்னாலுள்ள மக்களின் நிலையென்ன? அவர்களுக்கான பதிலென்ன? மேலும் இவ்வளவு காலமும் அந்தத்தாக்குதலை நடத்த செலவிட்டவைக்கு (ஆள், பொருள்) என்ன பதில்? இனி மீண்டும் அத்தாக்குதலை நிகழ்த்துவதற்காக இழக்கப்போகும் காலம், ஆள், பொருள் இழப்புக்கள் எவ்வளவு? இனி இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? இத்தாக்குதல் நடத்தப்படாததால் ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு?

படத்தில், கருவிலிருக்கும் குழந்தையைக் கருதி தாக்குதலைக் கைவிடுவதாகக் காட்டப்படுகிறது. இது நடத்தப்படாமல் போவதால் இருக்கும் பிரச்சனைகளுக்கு முன்னால் அது வெறும் தூசு. ஏன் இப்படியான இயக்கங்கள் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன என்பதற்கு (குறிப்பாக பாலியல் விசயங்களில்) இப்படம் எடுத்துக்காட்டு.

சந்தோஷ் சிவன் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கக்கூடும். அல்லது வேறொருவர் இக்கருவை வைத்து எடுக்கலாம். இல்லாவிட்டால், நானே எடுக்கக்கூடும் யார் கண்டது? . அப்படி படமெடுத்தால்;
அத்தாக்குதல் நடத்தப்படாததால் அவ்வியக்கம் எதிர்நோக்கும் பின்னடைவுகள், அவ்வியக்கத்தின் பின்னாலுள்ள மக்கள் அக்குறிப்பிட்ட- ‘அழிக்கப்படாமல்’ விடப்பட்ட- இலக்கால் அடையப்போகும் துன்பங்கள், இழப்புக்கள் என்பவை அப்படத்தில் சொல்லப்படும்.
அல்லது ரெறிறிஸ்ட் படத்தையே இன்னுமொரு பத்து நிமிடம் நீட்டி, அப்பெண் அத்தாக்குதலை நடத்தாமல் விட்டாலும் ஏற்கெனவே தீர்மானித்து வைக்கப்பட்ட இரண்டாவது வழிமுறை மூலம் (ஒரு திறமையான திட்டமிடல் இப்படித்தான் நடக்கும்; நடந்திருக்கிறது.) அவ்விலக்கு அழிக்கப்படுவதாக முடிக்கலாம். அத்தாக்குதலை நெறிப்படுத்தியவரே களத்தில் இறங்கி அந்த வேலையைச் செய்வதாகவும் இருக்கலாம். (அப்படியான சம்பவங்களும் உண்டு).

தற்கொலைத் தாக்குதலொன்று நடத்தப்படாமல் விடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பைச் சரியாக உணர வேண்டுமானால் கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அத்தாக்குதல் மட்டும் நடக்கவில்லையென்றால், இன்றைய யுத்த நிறுத்தமுமில்லை, சமாதானப்பேச்சு வார்த்தையுமில்லை, ஒரு ‘மண்ணாங்கட்டியுமில்லை’ (நன்றி சிவராம்). சிறிலங்காவின் திமிர் குறைந்திருக்கவும் வாய்ப்பில்லை.
—————————————————–
மேற்குறிப்பிட்ட விதயங்கள் தனியே புலிகளுக்கு மட்டுமன்று; எந்தவொரு விடுதலை இயக்கத்துக்கும் பொதுவானது, ரெறறிஸ்ட் படம்போல. எடுத்துக்காட்டுக்களுக்கு இலகுவாகவே புலிகளைப்பற்றி இங்கே கதைக்கப்பட்டது.
—————————————————–

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

குளத்தில் நீராடல்

கோப்பு வகை: அனுபவம், ஈழம், போராட்டம் — maathahal @ 12:59 மு.பகல்

வணக்கம்!

“நீர் ஆடல்” எண்டு ஒரு படப்பதிவு போட்டனான். அதில இந்தத் தலைப்புச் சம்பந்தமா ஓர் உண்மைச் சம்பவத்தைச் சொல்லப்போவதாக் கூறியிருந்தேன். அதை இப்போது சொல்கிறேன்.

நான் அப்போது எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என்னோடு எட்மன் என்றொருவனும் படித்தான். ஒரே வாங்குதான் நாங்கள் ரெண்டுபேரும். நல்ல கூட்டாளியள். (இப்ப அவன் இல்ல. அவனப்பற்றி இங்கே எழுதியருக்கிறன்)

நாங்கள் எடுத்த பாடம் சித்திரம். அவன் ஓரளவு நல்லாப் படம் கீறுவான். என்னைவிட நல்லாக் கீறுவான். (கீறுதல் எண்டது சும்மா கிறுக்கிற அர்த்தத்தில இல்ல. வரையிற அர்த்தத்தில) அப்ப நடந்த ஓர் இடைத்தவணைத் தேர்வில சித்திரப் பாடத்தில எங்களுக்கு வந்த தலைப்பு, “குளத்தில் நீராடுதல்”.

நானும் எனக்குத் தெரிஞ்ச குளத்தில கொஞ்சப்பேர் குளிக்கிற மாதிரி ஒரு படம் கீறினன். தேர்வுத்தாட்கள் தாற நேரத்தில சித்திர ஆசிரியையும் புள்ளிகள வாசிச்சா. பாத்தா, எப்பவும் எண்பதுக்கு மேல எடுக்கிற எட்மனுக்கு ஐம்பதோ என்னவோ தான். பிறகு எல்லாற்ற விடைத்தாளையும் தந்திட்டு கடசியா அவனக்கூப்பிட்டு, ஏனிப்பிடி படம் கீறினனி? எண்டு கேட்டா. அப்பதான் அவன் கீறின படத்தப் பாத்தம். கேணி மாதிரியொண்டில (யாழ்ப்பாணத்தில படிக்கட்டுக்கள் வச்சு கேணி மாதிரியிருக்கிற சிலதையும் குளம் எண்டு சொல்லுறது.) தண்ணி நிக்குது. அவ்வளவு தான். என்னடா இது எண்டு பாத்தா, பிறகுதான் விளங்கீச்சு, என்ன நடந்தது எண்டு.

குளத்தில் நீராடுதல் எண்டத, குளத்தில் நீர் ஆடுதல் எண்டு விளங்கிப்போட்டான். எண்டாலும் உப்பிடி விளக்கம் எடுக்கிறது சரியான கஸ்டம் கண்டியளோ. அவன் லட்சத்தில ஒருத்தனாயிருக்க வேணும். ஆனா அவன் அப்படித்தான் விளக்கம் எடுத்திருக்கிறான். அந்தக் கேணில நீர் ஆடுறதக் காட்டுறதுக்காகச் சின்னச்சின்ன அலைகள் காட்டியிருக்கிறான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சம். அவனும்தான். புள்ளிகள் குறைஞ்சதுகூட அவனுக்குக் கவலையில்ல. இந்தக் கதை பள்ளிக்கூடம் முழுக்கப் பரவீட்டுது. அடுத்தநாள் எங்களுக்குப் பாடமெடுக்காத, உயர்தரத்துக்கு மட்டும் ஏதோ ஒரு பாடம் எடுக்கிற வாத்தியார் ஒருத்தர் வந்து எங்கட வகுப்பில கதைச்சார்.

இவனின்ர பிரச்சினையச் சுட்டிக்காட்டி, அதுசம்பந்தமாத்தான் நான் கதைக்க வந்தனான் எண்டிட்டுத் துவங்கினார். உது ஏதோ பொல்லாத வியாதி எண்ட மாதிரி இருந்திச்சு அந்தாளின்ர கதை. ஏதோ ஆங்கிலச் சொல்லில சொல்லீச்சு, எங்களொருத்தருக்கும் விளங்கேல. உப்பிடியே போனா உது பெரிய பிரச்சினையளக் கொண்டந்துடும்; சோதினையில சின்னக் கணக்கக்கூட பெரிசா யோசிச்சு பெரியவழியளில செய்து பிழ விட வேண்டி வரலாம்; வாழ்க்கையில சின்னப்பிரச்சினையளப் பெரிசாக் கற்பனை பண்ணி வாழ்க்கையையே குழப்பிப்போடலாம்; உப்பிடி யோசிக்கிற ஆக்கள் பின்னாளில சரியாக் கஸ்டப்படுவினம்; வேலையளில பிழை விடுவினம்; உது கனக்க யோசிக்கிறதால தான் வாறது; உத இப்பவே தடுக்க வேணும்; தியானம் தான் நல்ல மருந்து.
அப்படியிப்பிடியெண்டு மனுசன் வெளுத்துக்கட்டுது. எனக்கு இந்தப்பிரச்சின வந்திருந்தா அந்தாளின்ர கதையக் கேட்டு நான் பயந்துபோயிருப்பன். (அதோட அந்தாள் சொல்லுற அவ்வளவு பிரச்சினையளும் எனக்கு வந்திருக்கக்கூடும்.) ஆனா நல்லகாலம் எட்மன் சிரிச்சபடியே கேட்டுக்கொண்டிருந்தான். அத அவன் கடுமையான பிரச்சினையா எடுக்கவேயில்ல.

அந்தக்குணம் தானோ என்னவோ, ரெண்டு காலும் போன பிறகும்கூட அவனால சைக்கிளோடவும் படகோடவும் முடிஞ்சுது.

*******************************

பின்னூட்டங்களோடு கூடிய மூலப்பதிவு

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.