சுந்தரவடிவேல் அவர்கள் மிருகக்காட்சி சாலை என்றொரு பாட்டை, படங்களுடன் அழகிய கோப்பாக்கி தரவிறக்க விட்டிருந்தார். அழகான சிறுவர் பாடலது.
அதே மெட்டிலமைந்த – எண்களை எண்ணும் பாடலொன்றை இப்போது நான் இங்கே இடுகின்றேன். சுந்தரவடிவேலரின் மிருகக்காட்சி சாலைப் பாடலின் மெட்டுத்தான் இந்தப்பாட்டுக்கும். எனவே அப்பாடலின் மெட்டு தெரிந்தவர்கள் அதே மெட்டில் இப்பாடலையும் பாடலாம்.
(ஆம், இப்பாடலின் மெட்டுத் தெரிந்தவர்கள் இதே மெட்டில் அப்பாடலையும் பாடி மகிழலாம்.)
இப்பாடலின் சிறப்பு, ஒன்று தொடக்கம் பத்துவரையான எண்கள் பாடலில் வரக்கூடியதாக அமைக்கப்பட்டதே.
இனி பாடல்.
ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.
ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்கலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ.
உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.
——————————————-
மேற்கண்ட பாடலைப் பாட வசதியாக அசை பிரித்துப் பார்த்தால் கீழ்க்கண்டவாறு வரும். அதையும் தருகிறேன்.
ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.
ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை
தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.
உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி
ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே
பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே
————————————————–
இதை யாராவது பாடி ஒலிப்பதிவாகத் தந்தால் நன்று. செய்பவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.
